பெரணமல்லூர் அருகே கெங்கையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

பெரணமல்லூர்: பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் மதுரா சஞ்சீவராயபுரம் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட கெங்கையம்மன், மாரியம்மன் மற்றும் விநாயகர் கோயில் மகாகும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேகம் முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு மேல் யாகசாலை அமைக்கப்பட்டு மகாகணபதி ஓமம் நடைபெற்றது. தொடர்ந்து வாஸ்துசாந்தி, பிரவேசபலி, முதலாம் கால யாகபூஜை நடந்தது. பின்னர் நேற்று காலை 7 மணிக்கு கோபூஜை, கஜபூஜை, தம்பதிபூஜை மற்றும் இரண்டாம் கால யாகபூஜையும் நடைபெற்றது.  

மேலும் மகாசங்கல்பமும் மகாபூர்ணாஹூதியும், 9.30 மணிக்குமேல் மேளதாள ஊர்வலத்துடன் புனிதநீர் அடங்கிய கலசங்கள் சிவாச்சாரியார்களால் யாகசாலையிலிருந்து கொண்டுவரப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க கெங்கையம்மன், மாரியம்மன் மற்றும் விநாயகர் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும், மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: