பெருமாள் கோயில்களின் தரிசனங்கள்

*செங்கல்பட்டு, பழைய சீவரத்தில் வெங்கடேசர் சங்கு சக்கரத்துடன் திருமாலாகவும் ஜடாமுடியும் நெற்றிக்கண்ணும் கொண்டு ஈசனாகவும், கையிலும் திருவடிகளிலும் தாமரை மலர் கொண்டு நான்முகனாகவும் மும்மூர்த்திகளின் சங்கமமாக விளங்குகிறார்.

*சென்னை-வேலூர் வழியில் காவேரிப்பாக்கத்தில் சந்திரனின் மனைவியரில் ஒருத்தியான திருவோணதேவி, பெருமாளை நோக்கித் தவமிருந்து தன் கணவரின் சாபத்தைப் போக்கினாள். மூன்றாம் பிறையன்று திருவோண நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபாடு செய்ய, நினைத்தது நிறைவேறுகிறது.

 

* ஹைதராபாத்-உஸ்மான் சாகர் ஏரிக்கரை, சிலுகூரிலுள்ள பெருமாள், வேண்டுவோருக்கு வெளிநாடு செல்ல விசா உடனே கிடைக்க அருள்வதால், இவர் விசா வேங்கடேசப் பெருமாள் எனப்படுகிறார்.

* தஞ்சாவூர், வரகூரில் உள்ள வெங்கடேசப் பெருமாளுக்கு, அவர் அருளால் வேலை கிடைத்து வெளியூர் செல்லும் இவ்வூர் இளைஞர்கள் தங்கள் முதல் மாத சம்பளத்தை அனுப்பி வைக்கிறார்கள்.

* ஈரோடு, பெருந்துறையில், வேப்பமரத்தடியில் ஐந்து கற்கள் வடிவத்தில் வன வேங்கடேசப் பெருமாளும் தாயாரும் அருள்கிறார்கள். கரூரில் உள்ள கல்யாண வெங்கடரமணர், மூன்றாம் குலோத்துங்க சோழனின் அரசவைப் புலவரான டங்கணாச்சாரி எனும் பக்தருக்காக இத் தலத்தில் நிலைகொண்டார்.

* செங்கல்பட்டு, அமிர்தபுரியில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் கருடனின் கையில் உள்ள வாசுகி பாம்பிற்கு அபிஷேகம் செய்யப்படும் பால் நீலநிறமாகிறது. எனவே, இது சர்ப்பதோஷ நிவர்த்தித் தலமாகும்.

 

* கோயமுத்தூர், உடுமலைப்பேட்டையில், கருவறையில் பெருமாளும் அனுமனும் சேர்ந்திருக்க, இது, ஸ்ரீனிவாசஆஞ்சநேயர் கோயிலாயிற்று.

* கிருஷ்ணகிரி, ஓசூரில் மலை மீது சிலை கொண்டுள்ள பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் திருடு போன பொருள் கிடைத்து விடுகிறது.

 

* கோயமுத்தூர், மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் துளசி, வேம்பு, வெள்ளெருக்குப்பூ, அரளி, ஊஞ்சற்கரி, எலுமிச்சைச்சாறு ஆகியவை கலந்த மல்லிப்பொட்டு எனும் பிரசாதம் தருகிறார்கள். இது வெண்குஷ்டத்தை நீக்குகிறது.

* சேலம், செவ்வாய்ப்பேட்டை, பிரசன்ன வெங்கடேசர் கோயிலில் உள்ள கருடாழ்வாருக்கு வஸ்திரம் சாத்தி வணங்க அனைத்து தோஷங்களும் நீங்குகின்றன.

* திண்டுக்கல், மலைக்கோட்டை அடி வாரத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் ஆலயத்தில், மார்கழி மாதம் முழுவதும், இத்தல ஆண்டாள் சூடிக் களைந்த மலர் மாலைகளையே பெருமாளுக்கு சாத்துகிறார்கள்.

 

* திருநெல்வேலி, உதயநேரிபாலாமடையில் அருளும் வெங்கடாஜலபதியின் அபிஷேகப் பாலை பிரசாதமாக அருந்தினால் மன, சரும நோய்கள் குணமாகின்றன.

 

* திருநெல்வேலி, சன்யாசி கிராமத்தில் உள்ள கல்யாண ஸ்ரீனிவாசர் ஆலய கருவறை விமானமும் திருப்பதியைப் போலவே ஆனந்த விமானம் என்று அழைக்கப்படுகிறது.

 

* திருநெல்வேலி, கருங்குளத்தில், மன்னன் சுபகண்டன், இரண்டு சந்தனக் கட்டைகளை பிரதிஷ்டை செய்து வெங்கடா ஜலபதியாக வழிபட்டான். இதய நோய்களைத் தீர்க்கிறார் இந்தப் பெருமாள்.

 

* திருநெல்வேலி, மேலத்திருவேங்கடநாதபுரத்தில் திருவேங்கடமுடையான் கருவறையில் 12 ஆழ்வார்களும் 12 படிகளாக உள்ளார்கள்.

* தூத்துக்குடி, புன்னைநகரில் பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளின் ஏகாந்த சேவையை வியாழன்தோறும் தரிசித்தால் கிரக தோஷங்கள் நீங்குகின்றன.

Related Stories: