தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சிறப்பு பள்ளியில் மேம்பாட்டு பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தசைத்திறன் குறைபாடு உள்ளோருக்கான சென்னை சிறப்பு பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் கற்றல் வாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அக்குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகளுடன் கூடிய சென்னை மாநகராட்சியின் சிறப்பு பள்ளியை ஆயிரம் விளக்கு பகுதியில் 2009ம் ஆண்டு இன்றைய முதல்வரும், அன்றைய துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அச்சிறப்பு பள்ளியில் இன்று, ரூ.50 லட்சம் செலவில் தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட சிறப்பு பள்ளி கட்டடம், மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாட ஏதுவாக புதுப்பிக்கப்பட்ட கூடை பந்தாட்ட அரங்கம், 1920ம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் தலைவர் சர்.பிட்டி தியாகராயர் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்ார். பின்னர், தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பீட்டிலான மருத்துவ உபகரணங்களை வழங்கி, அக்குழந்தைகளின் பயன்பாட்டிற்காக பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.25 லட்சத்தில் மின்தூக்கி வசதியுடன் கூடிய சிறப்பு பேருந்து சேவையினையும் தொடங்கி வைத்தார்.மேலும், தசைத்திறன் குறைபாடுள்ளோர்கான சென்னை சிறப்பு பள்ளியில் கட்டப்பட்டுள்ள இயன்முறை மருத்துவ ஆலோசனை அறை, வகுப்பறை, பெற்றோர் அறை, உளவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை அறை, மருத்துவ ஆய்வகம், தொழிற் பயிற்சி அறை ஆகியவற்றை முதல்வர் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் எழிலன், வெங்கடாசலம், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சிறப்பு பள்ளியில் மேம்பாட்டு பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: