யார் தெருவில் நிற்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி நாவடக்கத்துடன் பேச வேண்டும்-உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசம்

திருக்கனூர் :  திருக்கனூர் அருகே மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கொடாத்தூர், மணவெளி, கைக்கிளப்பட்டு ஆகிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதை போக்க புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை மூலம் ரூ.30 லட்சம் செலவில் கைக்கிளப்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரையோரம் 2 ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதற்கு மோட்டார், ஜெனரேட்டர் பொருத்தப்பட்டது. இதற்கான துவக்க விழா நேற்று கைக்கிளப்பட்டில் நடந்தது. இதில் தொகுதி எம்எல்ஏவும், உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இவ்விழாவில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர்கள் சங்கர், மல்லிகார்ஜூனன், முன்னாள் எம்எல்ஏ அருள்முருகன், பாஜக பிரமுகர்கள் வீரராகவன், கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சையது, செல்வகுமார், தமிழ்மணி, பாஜக தொகுதி தலைவர் வேதாச்சலம், வர்த்தக பிரிவு தலைவர் கலியபெருமாள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர், அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி நாவடக்கத்துடன் பேச வேண்டும். யார் நடுத்தெருவில் நிற்கிறார்கள் என்று புதுவை மக்களுக்கு தெரியும். 5 ஆண்டுகள் முதல்வராக இருந்துவிட்டு தேர்தலில் கூட நிற்க திராணியில்லாமல் பயந்து ஓடியவர் தான் நாராயணசாமி. அவர் என்னை பற்றியோ, முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தானை பற்றியோ, முன்னாள் அமைச்சர் மல்லாடியை பற்றியோ பேச தகுதி கிடையாது. 5 ஆண்டுகள் என்ன ஆட்சி செய்தார் என்று மக்களுக்கு தெரியும். முதல்வர் ரங்கசாமியை பற்றி பேச அவருக்கு தகுதி கிடையாது. இந்த மாநிலத்துக்கு என்னென்ன திட்டங்கள் நிறைவேற்ற முடியுமோ, அந்தந்த திட்டங்களை எல்லாம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆசியோடு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தடையில்லாமல் நிறைவேற்றி வருகிறது. எனவே, முன்னாள் முதல்வர் தரங்கெட்ட முறையில் பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம். நாராயணசாமி முதல்வராக இருந்த போது கவர்னருடன் ஒத்துப்போகாமல் மாநில வளர்ச்சிக்கு எப்படி தடையை ஏற்படுத்தினார் என்பது மக்களுக்கு தெரியும். இப்போது கவர்னர், அரசோடு ஒத்துழைத்து மாநில வளர்ச்சிக்காக எல்லா திட்டங்களையும் அமல்படுத்துகிறார். இது தவறு என்கிறாரா? இதையெல்லாம் செய்யக்கூடாது என்கிறாரா? இன்று கவர்னர் செய்வதை குறை சொல்கிறார் என்றால், அந்த அளவுக்கு வயிற்றெரிச்சலில் உள்ளார். அவரால் செய்ய முடியாததை இந்த அரசு செய்கிறது என்ற வயிற்றெரிச்சலில் பேசுகிறார். இங்கு பொம்மை ஆட்சி நடக்கவில்லை. மக்களாட்சி நடக்கிறது. பிரதமரை குறை கூற முன்னாள் முதல்வருக்கு தகுதி இல்லை. நேரடியாக பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் தெரியவில்லையா? அங்கே சென்றால் ஒரு நடிப்பு, இங்கே வந்தால் ஒரு நடிப்பு என்பது அவருக்கு வாடிக்கையாகிவிட்டது. காங்கிரஸ் முதல்வராக இருந்து விட்டு பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் காங்கிரஸ் துண்டை எடுத்துவிட்டு தான் பிரதமரை சந்திப்பார். பழைய போட்டோக்களை பார்த்தால் தெரியும். என்றாவது காங்கிரஸ் துண்டை போட்டுக்கிட்டு பிரதமரை சந்தித்து இருக்கிறாரா? என்று பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்….

The post யார் தெருவில் நிற்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி நாவடக்கத்துடன் பேச வேண்டும்-உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: