ராமானுஜர் சிலை திறப்பு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ராமானுஜரின் பொற்சிலை திறப்பு விழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்த த்ரிதண்டி சின்ன மன் நாராயண ராமானுஜ ஜீயருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ராமானுஜரின் பொற்சிலை திறப்பு நிகழ்வுக்கு என்னை அழைத்தமைக்காக எனது மரியாதை கலந்த நன்றியை உரித்தாக்குகிறேன். இந்த சீரிய தருணத்தில், ராமானுஜரின் சமத்துவ குரல் நாடெங்கும் சிறப்போடும் எழுச்சியோடும் ஒலிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்து கொள்கிறேன். ராமானுஜரது வாழ்க்கையின் சாரத்தை எடுத்து சொல்லும் வகையில் கலைஞர் ஒரு தொலைக்காட்சி தொடருக்கு கதை, வசனம் எழுதினார். அவரது இலக்கிய – திரை படைப்புகளில் இதுவே இறுதியானதாகும். அதே நேரத்தில் எந்நாளும் உயிர்ப்புடன் இருந்து அடுத்து வரும் தலைமுறைகளிடம், குறிப்பாக நம் நாட்டின் இளைஞர் திரளிடம் ராமானுஜர் என்னும் மாபெரும் சமூக சீர்திருத்தவாதியின் வாழ்வையும் பணிகளையும் கொண்டு செல்லும் படைப்பாக அது அமைந்திருக்கிறது. ராமானுஜர் பரப்பிய சீர்திருத்தங்கள் எங்களது நெஞ்சுக்கும் நெருக்கமானவைதாம். அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாகத்தான், அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களையும் அர்ச்சகர்களாக எனது அரசு நியமித்து, தமிழ்நாட்டுக் கோயில்களின் கருவறையில் பூசை செய்வதில் சமத்துவத்தை உறுதிசெய்துள்ளது. நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 8 மாதங்களில், மாநிலத்தில் கோயில்களின் நிர்வாகம் முறையாக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களின் சிறப்பான நிர்வாகத்துக்கு தேவையான நிதியினை ஒதுக்கியிருப்பதோடு – கோயில் பூசாரிகளின் நலன்களையும் காத்து வருகிறோம்.ராமானுஜரின் சமத்துவ சிலையானது என்ற அடையாளம் தேச ஒருமைப்பாட்டின் அடையாளமாக திகழ வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்….

The post ராமானுஜர் சிலை திறப்பு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: