திண்டுக்கல்: திண்டுக்கல்- சிலுவத்தூர் ரோடு வழியாக ஒரு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா, எஸ்ஐ ராதா மற்றும் போலீசார் சிறுவத்தூர் ரோடு சுப்புராம் பட்டறை அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் தலா 50 கிலோ எடையுள்ள 17 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திண்டுக்கல் ஒய்எம்ஆர் பட்டி சந்தன கோனார் தெருவை சேர்ந்த பால்பாண்டியன் (35) என்பதும், மாலப்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், சுப்புராம் பட்டறை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதிக விலைக்கு கால்நடை தீவனத்துக்கு விற்க கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர். மேலும் 850 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர்.
The post திண்டுக்கல் அருகே ரேஷன் அரிசி 850 கிலோ பறிமுதல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.
