சேலம், மார்ச் 21: தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான குறைந்தபட்ச நில அளவை குறைக்க கூடாது என, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜா, உயர்கல்வித்துறை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த 2014-2015 கல்வியாண்டிற்கு முன்னர் நிறுவப்பட்ட தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு குறைந்தபட்ச நில அளவு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் முறையே 3, 5 மற்றும் 10 ஏக்கர் நிலம் என இருந்தது.
தற்போது அதற்குப் பதிலாக 2, 3 மற்றும் 5 ஏக்கராக நிலத்தைத் திருத்தி குறைக்குமாறு தனியார் கல்லூரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை உயர்கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 3, 5, 10 ஏக்கர் போன்ற குறைந்தபட்ச நிலத் தேவை என்பது சில ஆரம்பக்கட்ட படிப்புகளுக்கு மட்டுமே தேவையானது. அதுவே எல்லாவற்றுக்குமான முடிவல்ல. வரும் காலத்தில், அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுடன் இன்னும் பல படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். படிப்புகளின் விரிவாக்கத்திற்கும், மாணவர் எண்ணிக்கை மற்றும் உள்கட்டமைப்பிற்கும் எப்போதும் கூடுதல் இடம் தேவைப்படுகிறது. ஏற்கனவே நிர்ணயத்தில் உள்ள நிலத்தை குறைத்தால், பாதுகாப்பான கல்வி சூழலுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படும். எனவே தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான குறைந்தபட்ச நில அளவை குறைக்க கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
