வடபழனியில் உள்ள ஓட்டலில் வைத்திருந்த ரூ.20 கோடி மதிப்புள்ள வைர நகைகள் நேற்று கொள்ளை: 4 பேர் கைது

சென்னை: நேற்று சென்னை வடபழனியில் உள்ள நட்ச்சத்திர விடுதியில் நகை வாங்க வருவதுபோல் நடித்து ரூ.20கோடி மதிப்புள்ள வைர நகைகளை திருடி சென்றுள்ளனர். வைர நகை திருடுபோன வழக்கில் 4 பேர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணாநகரை சேர்ந்த சந்திரசேகர் என்ற வைர வியாபாரி 2 நாட்களுக்கு முன்னதாக ஒரு தரகர் ஆரோக்கியராஜ் என்பவர் மூலமாக வைர நகைகளை விற்க முயன்றுள்ளார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் வைரங்களை வாங்குவதுபோல வீட்டிற்கு வந்து பேரம் பேசியுள்ளனர். இதனை அடுத்து விலை இறுதியான பிறகு நேற்று வடபழனியில் உள்ள நட்ச்சத்திர ஓட்டலில் பணத்தை கைமாற்றி வைரங்களை விற்க வந்த போது அண்ணாநகரை சேர்ந்த வைர வியாபாரி சந்திரசேகரை அடித்து, கட்டிப்போட்டு, வைரங்களை திருடி சென்றுள்ளனர். உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் வைர வியாபாரியை மீட்டு உடனடியாக வடபழனி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

புகாரை தொடர்ந்து உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டபோது, லண்டன் ராஜன் மற்றும் அவரது நண்பர் உள்ளிட்ட 4 பேர் இந்த சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தனிப்படையினர் சுங்கச்சாவடிகள் வழியாக தேடி சென்றனர். இதனை அடுத்து நகைகளை கொள்ளையடித்தவர்கள் தூத்துக்குடி சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விமானம் மூலம் அங்கு சென்ற தனிப்படை போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வைர நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

The post வடபழனியில் உள்ள ஓட்டலில் வைத்திருந்த ரூ.20 கோடி மதிப்புள்ள வைர நகைகள் நேற்று கொள்ளை: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: