திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் ஆகாய தாமரையை அகற்றி தூர்வார வேண்டும்

*கழிவுநீர் கலப்பதை தடுக்க மா.கம்யூ., கோரிக்கை

திருவாரூர் : திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் பரவியுள்ள ஆகாய தாமரையினை அகற்றி தூர்வாரிட வேண்டும் என்பதுடன் கழிவுநீர் கலப்பதையும் தடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.திருவாரூர் அருகே எண்கன் என்ற இடத்தில் வெட்டாற்றிலிருந்து ஓடம்போக்கி ஆறானது பிரிந்து அம்மையப்பன், திருவாரூர், கிடாரங்கொண்டான், ஆண்டிபாளையம் ஆகிய ஊர்கள் வழியாக நாகை மாவட்டத்திற்கு செல்கிறது.

இந்நிலையில் இந்த ஆறானது பாசன ஆறு மட்டுமின்றி மழை காலங்களில் வடிகாலாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆற்றில் தற்போது ஆகாய தாமரையானது அதிகளவில் பரவியுள்ளதன் காரணமாக ஆற்றில் நீர் வரும் நேரங்களில் சரிவர நீர் செல்ல முடியாமல் தடைபடுவதுடன் மழை காலங்களிலும் அதிக பாதிப்புகள் ஏற்ப்பட்டு வருகின்றன.

கடந்த 2021ம் ஆண்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடந்த 3 வருடங்களாக இந்த ஆற்றில் குறிப்பிட்ட அளவு நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளன.

இருப்பினும் இந்த ஆறு முழுவதும் உள்ள ஆகாய தாமரையினை தற்போதைய கோடை காலத்திலேயே அகற்றி தூர்வாரிட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும், பொது பணி துறையினருக்கும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மட்டுமின்றி இந்த ஆற்றின் இருகரைகளிலும் இருந்து வரும் கட்டிடகள் மூலம் கலக்கப்படும் கழிவுநீரையும் தடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் மாவட்ட செயலாளர் முருகையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்திற்குள் சுமார் 20 கிலோ.மீட்டர் தூரம் வரையில் இந்த ஆறு செல்கிறது. இதில் கடந்த வருடம் கலெக்டர் அலுவலகம் பகுதியிலிருந்து விளமல் வரையில் தூர்வாரப்பட்டது.அவ்வாறு தூர்வாரப்பட்ட இடங்களில் தற்போது வரையில் நீர் ஓடிகொண்டிருப்பதால் இந்த பகுதியில் பொதுமக்கள் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட தங்களது அன்றாட தேவைகளுக்காக ஆற்றுநீரை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆற்றில் இருகரை ஓரங்களிலும் இருந்து வரும் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தற்போது அதிகளவில் கழிவுநீரானது இந்த ஆற்றில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு கலக்கப்படும் கழிவுநீர் காரணமாக ஆற்றுநீர் துர்நாற்றமும் வீசி வருகிறது.எனவே இந்த ஆற்றில் இருந்து வரும் ஆகாய தாமரை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றி தூர்வாரிட வேண்டும் என்பதுடன் கழிவுநீர் கலப்பதையும் தடுத்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும், பொதுபணிதுறையினரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு முருகையன் தெரிவித்துள்ளார்.

The post திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் ஆகாய தாமரையை அகற்றி தூர்வார வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: