வார விடுப்பு வழங்காவிட்டால் போலீசார் அவமதிப்பு வழக்குத் தொடரலாம்: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: காவலர்களுக்கு வார விடுப்பு வழங்காவிட்டால் நேரடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரை ஆஸ்டின்பட்டியைச் சேர்ந்த காவலர் செந்தில் குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழக காவல் துறையில் அதிக பணிச்சுமை இருப்பதாகவும், ஓய்வின்றி பணியாற்ற வேண்டி உள்ளதாகவும் காவலர்கள் தரப்பில் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது. போலீசார் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களது குறைகளை தீர்க்கும் வகையில் காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என 2021ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணை நடைமுறை படுத்தப்பட வில்லை. எனவே, காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு, வார விடுமுறை வழங்க வேண்டும் என 2021ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த், முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘மனுதாரருக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. போதுமான அளவு காவல் துறையினர் இல்லாததால், இந்த அரசாணையை முறையாக நடை முறைப்படுத்த இயலவில்லை’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘நடைமுறை சிக்கல் இருப்பதை அரசாணை வெளியிடுவதற்கு முன் யோசித்திருக்க வேண்டும். முதல்வர் பிறப்பித்த அரசாணையை முறையாக நடைமுறைப் படுத்துவதில் என்ன பிரச்னை? தமிழக முதல்வர் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் முறையாக நிறைவேற்றாதது ஏன்? இதனால் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள். தலைமை காவலர்கள், காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலனுக்காக இந்த உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும். காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க தவறினால் காவலர்கள் நேரடியாக நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற அவமதிப்பு தொடரலாம்’’ எனக் கூறிய நீதிபதி, வார விடுப்பு வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என குறிப்பிட்டு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

The post வார விடுப்பு வழங்காவிட்டால் போலீசார் அவமதிப்பு வழக்குத் தொடரலாம்: ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.

Related Stories: