மதுரை சித்திரை திருவிழாவிற்கு அனுமதி பணத்தை பற்றி ஒன்றும் இல்லை முழுமையாக பணிகளை செய்து கொடுப்போம்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், ‘‘1 கோடி ரூபாய் நிலுவையில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது அமைச்சர் கவனத்திற்கு வந்திருக்கிறதா. அந்தப் பணத்தைக் கட்டவில்லை என்றால், சித்திரைத் திருவிழாவிற்கு அனுமதிக்க மாட்டோம் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அது அமைச்சரின் கவனத்திற்கு வந்திருக்கிறதா?. கடந்த ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதால், அந்தப் பணத்தைக் கட்டினால்தான், இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவிற்கு அனுமதி வழங்குவோம் என்று மாநகராட்சி அதிகாரிகள் சொல்கிறார்கள்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘‘பொதுப் பணித் துறை அமைச்சர், வணி வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மற்றும் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் ஆகியோர் எல்லாம் மதுரையில் சித்திரைத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பதைப் பார்த்தார்கள் என்று சொன்னார்கள். அந்த நேரத்தில், சென்னையில் நடைபெற்ற கூட்டத்திற்காக மதுரை மாநகராட்சி ஆணையர் வந்திருந்தார். அவர் வந்தபோது, அமைச்சர்கள் எல்லாம் அங்கு சென்று பார்த்திருக்கிறார்கள். முழு வேலையும் மாநகராட்சி செய்ய வேண்டிய வேலை. எதையும் எதிர்பாராமல், முழு வேலையையும் முடித்து, மக்களுக்கு எல்லாவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று கூறினேன். பணத்தைப் பற்றி ஒன்றும் இல்லை; முழுமையாக அனைத்துப் பணிகளையும் செய்து கொடுப்போம்’’ என்றார்.

The post மதுரை சித்திரை திருவிழாவிற்கு அனுமதி பணத்தை பற்றி ஒன்றும் இல்லை முழுமையாக பணிகளை செய்து கொடுப்போம்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: