வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,170 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: 20 ஆயிரம் பேர் முன்பதிவு; போக்குவரத்து துறை தகவல்

சென்னை: முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி 1,170 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாரவிடுமுறை நாட்கள் மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சிக்கு 25ம் தேதி (வெள்ளி) 370 பேருந்துகளும், 26ம் தேதி (சனி) 450 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 25ம் தேதி (வெள்ளி) 60 பேருந்துகளும், 26ம் தேதி (சனி) 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 26ம் தேதி 20 பேருந்துகளும், 27ம் தேதி 20 பேருந்துகள் என ஒட்டுமொத்தமாக இந்த வார இறுதி நாட்களில் 1,170 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல், ஞாயிறுக்கிழமையன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமையன்று 7,970 பயணிகளும், சனிக்கிழமை 5,115 பயணிகளும் மற்றும் ஞாயிறுக்கிழமை 7,189 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,170 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: 20 ஆயிரம் பேர் முன்பதிவு; போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: