அகமதாபாத்திற்கு புறப்பட்ட பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: சென்னையில் பரபரப்பு

சென்னை: சென்னையில் இருந்து அகமதாபாத்திற்கு 166 பயணிகள் உள்பட 173 பேருடன் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு, விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. பின்பு விமானம் பழுது பார்க்கப்பட்டு சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் தாமதமாக அகமதாபாத் புறப்பட்டு சென்றது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, நேற்று காலை 9.50 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அகமதாபாத்திற்கு 166 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என 173 பேருடன் புறப்பட்டு, ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்து, விமானத்தை அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தினார். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து இழுவை வண்டி வந்து, விமானத்தை இழுத்துக் கொண்டு வந்து பழுதடைந்த விமானங்கள் நிற்கும் பகுதியில் நிறுத்தினர். அதோடு விமான பொறியாளர்கள், விமானத்துக்குள் ஏறி இயந்திரங்களை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக, விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை சரி செய்ய முடியவில்லை. எனவே, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் பிற்பகல் 12.30 மணி அளவில் கோளாறுகள் சரி செய்யப்பட்டு, விமானம் சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து அகமதாபாத்துக்கு புறப்பட்டு சென்றது. இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக, ஆபத்து தவிர்க்கப்பட்டு, விமானத்தில் இருந்த 166 பயணிகள் உள்பட 173 பேர் நல்வாய்ப்பாக தப்பினர்.

The post அகமதாபாத்திற்கு புறப்பட்ட பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: சென்னையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: