ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 3 மையங்களில் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கி, 25ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மாநிலம் முழுவதும் நேற்று தொடங்கியது. இதில், ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்துவதற்கு ஈரோடு யுஆர்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, திண்டல் பாரதி வித்யா பவன் பள்ளி, கோபி சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகிய 3 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு மாவட்ட பிளஸ் 2 விடைத்தாள்களை பகுதி வாரியாக குலுக்கி வெவ்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேறு மாவட்ட விடைத்தாள்கள் ஈரோட்டில் உள்ள 3 திருத்தும் மையங்களுக்கு வந்து சேர்ந்தன. 3 மையங்களிலும் நேற்று விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. முன்னதாக விடைத்தாள்களை திருத்தி மதிப்பெண் அளிப்பது, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் முறைகள் குறித்து ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு விளக்க கூட்டம் நடந்தது.
இதில், ஈரோடு யுஆர்சி பள்ளியில் 31,934 விடைத்தாள்களும், திண்டல் பாரதி வித்யா பவன் பள்ளியில் 47,012 விடைத்தாள்களும், கோபி சாரதா பள்ளியில் 57,580 விடைத்தாள்களும் என மொத்தம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 526 விடைத்தாள்களை திருத்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 1,199 ஆசிரியை, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, திருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோடை வெயிலை சமாளிக்க கோடைகாலம் தொடங்கிவிட்டது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க பல்வேறு யுத்திகளை மக்கள் கையாண்டு வருகின்றனர். சாலைகளில் பழச்சாறு விற்பனை சூடு பிடித்துள்ளது. பல்வேறு இடங்களில் சாலையோரம் கூழ், கற்றாழை ஜூஸ், இளநீர், நுங்கு மற்றும் பல்வேறு பழக்கடைகள் அதிகளவில் காணப்படுகிறது. ஒவ்வொரு முறையும் கோடை காலம் வரும்போதும் பொதுமக்கள் இவ்வாறு தங்களது உடலை குளிர்விக்க பல்வேறு விஷயங்களை தேடி வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க வழக்கமாக மது வகைகளை வாங்கி பருகும் குடிமகன்கள், கோடைகாலத்தில் மது வகைகளை தவிர்த்து, பீர் வகைகளை அதிகம் வாங்கி குடித்து வருகின்றனர். அதிலும் சில பேர் இயற்கையான முறையில் கிடைக்கும் கள் எனப்படும் பானத்தை தேடி ஆந்திராவிற்கு படையெடுக்கின்றனர். இதற்காக அதிகாலையிலேயே எழுந்து கள் குடிப்பதற்காக பலர் சென்று விடுகின்றனர். அந்த காலத்தில் இருந்தே மனிதன் ஏதாவது ஒரு போதைக்கு அடிமையாகி அதனை தொடர்ந்து கடைபிடித்து வருகிறான். பல வகையான போதை பொருட்களை மனிதர்கள் பயன்படுத்தி வந்தாலும் கோடை காலகட்டத்தில் மட்டும் கிடைக்கும் கள் எனப்படும் ஒரு வகையான பானத்திற்கு பலரும் அடிமையாகி கிடக்கின்றனர்.
புராண காலத்தில் இருந்தே இந்த கள்ளுக்கு பல்வேறு வரவேற்பு உண்டு. கள் என்பது பனை மற்றும் தென்னை போன்ற மரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் குறைவான போதை ஏற்படுத்தும் பானமாகும். பனைமரம் பூக்கும் தருணத்தில் அதன் உச்சியில் பனை ஓலைகளுக்கு இடையே உருவாகும் குறுத்து என்கின்ற விழுதை சரியான முறையில் வெட்டி அதனை சிறிய மண்பாண்டத்தில் செலுத்தி மண்பாண்டத்தின் கழுத்து பகுதியை கயிற்றால் கட்டி அதனை மரத்துடன் கட்டுவார்கள்.
குருத்தில் இருந்து சொட்டு சொட்டாக வடியும் நீரே, கள் ஆகும். கள்ளுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் அதுவே பதநீர் எனும் இனிப்பான பானமாகும். கோடைகாலத்தில் பத நீரை தினமும் அளவுடன் குடித்தால் உடல் சூட்டை நீக்கி அது உடலில் குளிர்ச்சியை தரும் என சிலர் தெரிவிக்கின்றனர். மேலும், வாய்ப்புண், குடல் புண்களை ஆற்றும் குணமுடையது எனவும் தெரிவிக்கின்றனர். பதனீரில் இருந்து பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, நாட்டு சர்க்கரை போன்ற இனிப்பு பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கள் இறக்கி விற்பதற்கும், குடிப்பதற்கும் 1987ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது.
எதற்காக தடை செய்யப்பட்டது என ஆராயும் போது, பனை மரத்திலிருந்து இறக்கும் கள்ளில் போதையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல ரசாயனங்களை கலந்து விற்பதாகவும், இதனால் அதனை பருகுபவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாலும் ஒவ்வொரு இடத்திலும் நேரில் சென்று கள்ளில் கலப்படம் உள்ளதா என்பதை ஆராய முடியாது என்ற காரணத்தினாலும், கள்ளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. தமிழகத்தில் கள்ளுக்கு தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், சென்னையை அடுத்துள்ள ஆந்திர மாநில எல்லையில் கள் இறக்கப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர எல்லையான பனங்காடு, ஆரம்பாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட இடங்களில் கள் இறக்கி விற்கப்படுகிறது.
சென்னை – கொல்கத்தா நெடுஞ்சாலையில் பல இடங்களில் இந்த கள் விற்கப்படுவதை பார்க்கலாம். அங்குள்ள ஊருக்குள் சென்றால் நம் கண் முன்னே கள் இறக்கி தருவார்கள். காலை, மாலை என அங்கு இரு வேளைகளிலும் கள் இறக்கப்படுகிறது. இதே போன்று ஊத்துக்கோட்டை பகுதியை தாண்டி சென்றால் ஆந்திர எல்லை பகுதியான சத்தியவேடு, சூலூர்பேட்டை, நெல்லூர் போன்ற இடங்களிலும் சென்னையிலிருந்து கள் பிரியர்கள் சென்று கள் குடித்து விட்டு திரும்புகின்றனர்.
குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் கூட்டம் கூட்டமாக சென்று குறிப்பிட்ட இடங்களில் கள் குடித்து வருகின்றனர். இதற்காக கள் இறக்கும் இடங்களை சுற்றி அவர்களுக்கு தேவையான சைடிஸ் எனப்படும் அசைவ உணவு வகைகளும் தயார் செய்து தரப்படுகிறது. குறிப்பாக வாத்து கறி, நாட்டுக்கோழி முட்டை வறுவல், கருவாடு, மத்தி மீன் போன்றவை அதிக அளவில் வீடுகளில் செய்து விற்கப்படுகிறது.
விளையும் குறைவு, குடிப்பதற்கு நன்றாக இருக்கிறது என்பதால் கோடை காலத்தில் கள் குடிப்பதற்கு ஆந்திராவை நோக்கி கூட்டம் கூட்டமாக சென்னை இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஆந்திர எல்லையில் திருவிழா போல் ஒவ்வொரு தோப்பிலும் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஆந்திர கள் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கள் இறக்கும்போது சிலர் அது எந்த மரத்து கள் என்று கேட்பார்கள். குறிப்பாக ஆண் மரமா, பெண் மரமா என கேட்பார்கள். ஆண் மரம் அதிக வீரியம் உள்ளதாகவும், பெண் மரம் கள் சற்று வீரியம் குறைவாக உள்ளதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். மேலும் 41 நாட்கள் தொடர்ந்து இந்த ஆண் மரத்தின் கள்ளை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என சிலர் தெரிவிக்கின்றனர். இதனால் சிலர் ஆண் மர கள் மட்டுமே வேண்டும் என கேட்டு வாங்கி பருகி வருகின்றனர்.
கள் என்பது அனைத்து நாட்களிலும் கிடைக்கும் பானம் கிடையாது. குறிப்பிட்ட சீசனில் மட்டுமே அது கிடைக்கிறது. குறித்துப்பாக பிப்ரவரி மாதம் முடியும் தருவாயில் அந்த சீசன் தொடங்குகிறது . அது மே மாதம் வரை நீடிக்கிறது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் கள் அதிகளவில் கிடைக்கும். அதன்பிறகு அதன் சீசன் முடிவடைந்து மே மாதத்தில் இருந்து கள் இறக்குமதி படிப்படியாக குறையும். ஆந்திர எல்லை ஒட்டி உள்ள தோப்புகளை பலரும் குத்தகைக்கு எடுத்து இந்த மூன்று மாதங்களில் மட்டும் கல் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பிட்ட குத்தகை காலம் முடிந்த பிறகு அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விடுகின்றனர்.
The post பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.