ஈரோடு,ஏப்.4: அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பான போட்டா-ஜியோ சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய முதன்மை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை வகித்தார்.இதில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும்.
நிதி பற்றாக்குறையை காரணம்காட்டி 2020ம் ஆண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு சலுகையை 2026 ஏப்ரல் 1ம் தேதி முதல் பணமாக்கி கொள்ளலாம் எனும் அறிவிப்பு வெளியிட்டு இருப்பதை ரத்து செய்துவிட்டு 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் பணமாக்கி கொள்ளலாம் என உத்தரவிடவேண்டும். தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7வது ஊதியக்குழு நிர்ணயத்தில், 21 மாத நிலுவை தொகை பணியாளர்களுக்கு வழங்காமல் நிலுவையில் உள்ளது.
அதை விடுவிக்கவேண்டும். 2009 ஜூன் 1ம் தேதி முதல் பணியேற்று 7வது ஊதியக்குழுவின் மூலமாக ஊதிய கட்டமைப்பில் பாதிக்கப்பட்டு, ஓராண்டு காலம் இடைவெளியில், ரூ.15க்கும் குறைவாக மாத ஊதியம் பெறும் இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இந்த ஆர்ப்பாட்டத்தில் போட்டா-ஜியோ அமைப்பினர் திரளானோர் கலந்துகொண்டனர்.
The post அனைத்து அரசு பணியாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.