ஐபிஎல் 9வது லீக் போட்டி; குஜராத் அபார வெற்றி

அகமதாபாத்: மும்பை அணியுடனான லீக் ஆட்டத்தில் குஜராத் 36 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது சீசனின் 9வது லீக் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. முதலில் குஜராத் அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் சுப்மன் கில், தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் களமிறங்கினர். பவர்பிளே ஓவர்களில் இருவரும் அதிரடியாக ஆடி, விக்கெட் இழப்பின்றி 66 ரன் குவித்தனர். 9வது ஓவரின்போது, ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தில், நமன் திர்ரிடம் கேட்ச் தந்து சுப்மன் கில் (38 ரன்) வெளியேறினார். அதையடுத்து, ஜோஸ் பட்லர், சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்தார். 14வது ஓவரில் முஜிபுர் ரஹ்மான் பந்தில் ரையான் ரிக்கெல்டனிடம் கேட்ச் தந்து ஜோஸ் பட்லர் (39 ரன்) ஆட்டமிழந்தார்.

பின், மற்றொரு தமிழக வீரர் ஷாருக்கான், சாய் சுதர்சனுடன் இணை சேர்ந்தார். ஆனால், 16வது ஓவரை வீசிய பாண்ட்யா பந்தில் திலக் வர்மாவிடம் கேட்ச் தந்து ஷாருக்கான் 9 ரன்னில் வெளியேறினார். அதையடுத்து, ஷெர்ஃபேன் ரூதர்போர்ட் உள்வந்தார். அற்புதமாக ஆடி 63 ரன் குவித்திருந்த சாய் சுதர்சன், 18வது ஓவரின் கடைசி பந்தில் அவுட்டானார். அடுத்த ஓவரில், ராகுல் தெவாட்டியா (0), ரூதர்போர்ட் (18 ரன்) ஆட்டமிழந்தனர்.

சத்யநாராயணா ராஜு வீசிய கடைசி ஓவரில் ரஷித் கானும், சாய் கிஷோரும் அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2, போல்ட், சாஹர், முஜிபுர், சத்யநாராயணா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை வீரர்கள் களமிறங்கினர். துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர் பின் வந்த வீரர்களில் திலக் வர்மா (39 ரன்), சூர்யகுமார் யாதவ் (48ரன்) தவிர மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் அவுட் ஆகினர். அதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன் மட்டுமே எடுத்தது. அதனால் 36 ரன் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் முகமது சிராஜ், பிரசித் தலா 2, சாய் கிஷோர், ரபாடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

The post ஐபிஎல் 9வது லீக் போட்டி; குஜராத் அபார வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: