பொன்னேரி, மார்ச் 28: கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவ்வப்போது தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்படுகிறது. நேற்றும் 4 மணி நேர பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி ரயில் இன்ஜின் மட்டும் நேற்று தனியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்திற்கும் எண்ணூர் ரயில் நிலையத்திற்கும் இடையே இன்ஜினுக்கு மின்சாரம் கடத்தும் கொக்கி மின் ஒயரில் சிக்கியதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அத்திப்பட்டு, புதுநகர் என அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் புறநகர் ரயில்கள் 1 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் ரயில் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மின்சார வயரில் சிக்கிய கம்பியை ரயில்வே ஊழியர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அப்புறப்படுத்தியதை தொடர்ந்து ரயில்கள் இயக்கப்பட்டன.
The post வயரில் இஞ்ஜின் கொக்கி சிக்கியதால் அத்திப்பட்டு புதுநகர்-எண்ணூர் இடையே ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.