ஆர்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 6 பேர் சிக்கினர்: 26 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி, 2 பைக் பறிமுதல்

ஆர்.கே.பேட்டை, மார்ச் 28: ஆர்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 26 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள், 2 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஆர்.கே.பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திருத்தணி, பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் தனிப்பட்ட வீடுகளை நோட்டமிட்டு, கொள்ளையடிக்கும் சம்பவம் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.சீனிவாசப்பெருமாள் உத்தரவின்பேரில், திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையில், ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் ஞானசேகர், சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி தலைமையில் போலீசார், கொள்ளை சம்பவங்கள் நடந்த பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கடந்த சில வாரங்காளாக கொள்ளையர்களை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து பாராஞ்சி கிராமத்தில் பதுங்கியிருந்த சுதன் (27), அவரது மனைவி தமிழ்ச்செல்வி (22), சந்தோஷ் (26), அஜித்குமார் (32), மனோ (19), ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நாகேஷ் (22) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குடியிருப்புகள் அதிகம் இல்லாத, தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, அதில் பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பது தெரியவந்தது. இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 26 சவரன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள், 2 பைக்குகள், கேஸ் ஸ்டவ், அரிசி மூட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கைதான 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை பள்ளிப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள், 6 பேர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆர்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 6 பேர் சிக்கினர்: 26 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி, 2 பைக் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: