ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம் தகவல்

சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. 28 (வெள்ளி), 29 (சனி), 30 (ஞாயிறு) மற்றும் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி. கோயம்புத்தூர். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28ம் தேதி 460 பேருந்துகளும், 29ம் தேதி 530 பேருந்துகளும் ஆக மொத்தம் 990 பேருந்துகளும், மற்றும் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கும் மற்றும் இதர ஊர்களுக்கு 890 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 28ம் தேதி அன்று 100 பேருந்துகளும் மற்றும் 29ம் தேதி அன்று 95 பேருந்துகளும் மாதவரத்திலிருந்து 28 மற்றும் 29ம் தேதி அன்று தலா 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

The post ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: