மழையால் பாதிக்கப்பட்டு பயிர் இழப்பீடு தொகை வழங்கிய விபரங்களை வெளியிட வேண்டும்

*குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

அரியலூர் : மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான வழங்கப்பட்டுள்ள இழப்பீடு தொகை விபரங்களை வெளியிட வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் கலந்து கொண்டு பேசியபோது, கால்நடைகளுக்கான தீவனங்கள் உயர்ந்துள்ளதால் பால் உற்பத்தியாளர்களுக்கு பசும் பால் லிட்டருக்கு ரூ.10, எருமை பால் லிட்டருக்கு ரூ.20 என உயர்த்தி வழங்க வேண்டும்.

மருதையாற்றின் இரு பக்கமும் அளவீடு செய்து, எல்லைக்கல் நட்டு கரையை பலப்படுத்த வேண்டும்.மாவட்டத்திலுள்ள கூட்டுறவு கடன் சங்கத்தின் கடன் பெற்று கெடு தேதிக்குள் கடனை திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு 10 தினங்களில் மீண்டும் கடன் வழங்க வேண்டும்.

புள்ளம்பாடி வாய்க்காலில் அதிகளவில் தண்ணீரை திறந்து சுக்கிரன் உள்ளிட்ட அனைத்து ஏரிகளிலும் நிரப்ப வேண்டும்.குருவாடி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள சுமார் 30 ஏக்கர் நெல் பயிர் அடிக்கடி தண்ணீரீல் மூழ்கி வருவதால் வடிகால் வாய்கால்களை தூர் வார வேண்டும் என்றார்.அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம்:

தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வதால் ஏழை,எளிய விவசாய மக்கள் தங்கம் வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். எனவே, இந்தியாவில் தங்கத்தின் விலை ஒன்றிய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதுவரை தங்கத்துக்கான ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்ய வேண்டும். தங்கத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை தடுக்க வேண்டும்.

மேலும், இது குறித்து ஒன்றிய அரசுக்கு மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.கண்டராதித்தம் செம்பியன் மாதேவி பேரேரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன் 1,680 ஏக்கர் பரப்பளவை மீட்க வேண்டும்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள2,477 நீர்நிலைகளை தூர்வார வேண்டும் என்றார்.

அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து பேசியது: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடு தொகையை எத்தனை ஏக்கருக்கு வழங்கப்பட்டுள்ளதை தெரியப்படுத்த வேண்டும்.

ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்க வேண்டம். போக்குவரத்துக்கு இடையூறாக அரசு சிமென்ட் ஆலை முதல் ரவுண்டானா வரை சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள ரவுண்டானாவில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிலையத்தில் உரக்கடை மற்றும் முதல்வர் மருந்தகம் அமைக்க வேண்டும்.

தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, அவைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, வேளாண்மை துணை இயக்குநர் கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: