உணவு பாதுகாப்பு துறை சார்பில் கலப்பட பொருட்கள் விழிப்புணர்வு கண்காட்சி

மதுராந்தகம்: உணவு பாதுகாப்புத் துறை சார்பில் கலப்பட பொருட்களை எளிதில் கண்டறிவது குறித்து கீழ்மருவத்தூர் ஊராட்சியில் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கல்லூரி மாணவர்களின் நாடக நிகழ்ச்சி கீழ் மருவத்தூர் ஊராட்சியில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா தலைமை தாங்கினார். லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் பிரசாத் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உணவுப் பொருள் கலப்படத்தை வீட்டிலிருந்து கண்டறிவதற்கு பொது விரைவு சோதனைகள் குறித்தும், உள்ளூர் உணவை சாப்பிடுங்கள், பருவ கால உணவை சாப்பிடுங்கள், பல விதமான உணவை சாப்பிடுங்கள் உள்ளிட்ட உணவுகள் குறித்து படத்துடன் விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் தெருக்கூத்து மூலமாக செறிவூட்டப்பட்ட பால், எண்ணெய், அரிசி, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றின் நன்மைகள் குறித்தும், சரிவிகித உணவு முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

The post உணவு பாதுகாப்பு துறை சார்பில் கலப்பட பொருட்கள் விழிப்புணர்வு கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: