இலங்கை கடற்படையின் சிறைபிடிப்பு நடவடிக்கையை கண்டித்து, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவ சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் பொருளாளர் பிரான்சிஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று (மார்ச் 19) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனையொட்டி படகுகளையும் கரை நிறுத்தியுள்ளனர்.
மீனவர் சங்க பிரதிநிதி சகாயம் அளித்த பேட்டி: கச்சத்தீவு திருவிழாவிற்கு முதல் நாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மீனவ சங்க பிரதிநிதிகள், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து மீனவர்களின் பிரச்னைகளை எடுத்துரைத்தோம். இலங்கை வசம் உள்ள மீனவர்களின் படகுகளையும் விடுவிக்கக் கோரிக்கை மனு அளித்தோம். உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என தெரிவித்தனர்.
ஆனால் அடுத்தநாள் கச்சத்தீவு திருவிழா நடந்து கொண்டிருக்கும் போதே சிறையில் உள்ள மீனவர்களுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திருவிழாவில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசி கோரிக்கை வைத்தபோது, இதுவரை இந்திய அரசு சார்பில் மீனவர் பிரச்னை குறித்து யாரும் தங்களிடம் பேசவில்லை என்றார்.இவ்வாறு அவர் கூறினார்.
The post மீண்டும் 3 பேர் சிறைபிடிப்பு மீனவர் பிரச்னை குறித்து இந்திய அரசு பேசவில்லை: இலங்கை அமைச்சர் தகவலால் அதிர்ச்சி appeared first on Dinakaran.