இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வலுவான நடவடிக்கை தேவை: ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்: 2025ம் ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் பத்தாவது சம்பவத்தை ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் (17ம் தேதி) அன்று மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை, அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் நேற்று இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதை வேதனையுடன் குறிப்பிடுகிறேன்.

பாரம்பரிய மீன்பிடி பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை என்று பலமுறை தான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும், இதுபோன்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொய்வின்றி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இலங்கை கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதால், அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கை சிறை காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 110 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

The post இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வலுவான நடவடிக்கை தேவை: ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: