காஞ்சிபுரம் மண்டலத்தில் தேர்வான 20 முதியோர்கள் காசி யாத்திரை

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், வயது முதிர்ந்த முதியவர்களை ராமேஸ்வரம், காசி கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச்செல்ல வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க,ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இந்து சமய அறநிலைத்துறை சார்பில், இந்த ஆண்டு அதிகப்படியானோர் ராமேஸ்வரம், காசி ஆன்மீகப் பயணத்திற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 420 முதியோர் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 5 லட்சம் செலவில் மூன்று கட்டங்களாக ஆன்மீகப் பயணத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அந்த வகையில், முதல் கட்டமாக கடந்த 4ம்தேதி முதியோர் பக்தர்கள் காசி யாத்திரை ஆன்மீகப் பயணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சென்னை ஆகிய மண்டலங்களில் தேர்வு செய்யப்பட்ட முதியோர் பக்தர்கள் கலந்துகொள்ளும் ராமேஸ்வரம் காசி யாத்திரை ஆன்மீகப் பயணம் நேற்று முதல் தொடங்கி வரும் 19ம்தேதி வரை நடைபெறுகிறது. ஆன்மீக பயணத்திற்காக காஞ்சிபுரம் மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்ட 20 முதியோர் பக்தர்கள் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் இருந்து ராமேஸ்வரம் காசி யாத்திரை ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள் பாதுகாப்புடன் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமர துரை கலந்துகொண்டு, ஆன்மீகப் பயண வாகனத்தை கொடியசைத்து வைத்து, பக்தர்களை வழிய அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குமரகோட்டம் முருகன் கோயில் செயல் அலுவலர் கேசவன், இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள், முதியோர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சிபுரம் மண்டலத்தில் தேர்வான 20 முதியோர்கள் காசி யாத்திரை appeared first on Dinakaran.

Related Stories: