இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ராஜசேகர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இது நீதிமன்ற அவமதிப்பாகும். தற்போது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், சிறார் நீதி சட்டம் உள்ளிட்ட சிறார்கள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்துவதை யார் கண்காணிப்பார்? ஆணையம் இல்லாமல் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பிற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? ஆணையம் அமைப்பதற்கு கால வரம்பை நிர்ணயிக்க வேண்டும். எப்போது தேர்வு நடைமுறைகளை முடிக்க போகிறீர்கள்? தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி சமூக நலத் துறை செயலாளரை காணொலியில் ஆஜராகுமாறு அறிவுறுத்தினர்.
அதன்படி, காணொலி மூலம் ஆஜரான சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், வழக்கு காரணமாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டது. தற்போது வழக்குகள் முடிந்து இந்த பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. மார்ச் 20ம் தேதி விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள். அதன்பின்னர், அமைச்சர் தலைமையிலான குழு, ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும். காவல் துறை சரிபார்ப்பு விசாரணை உள்ளிட்ட நடைமுறைகள் முடிக்க மூன்று மாத கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மூன்று மாத அவகாசம் வழங்கப்படுகிறது. ஆணையம் அமைத்த பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். ஆணைய தலைவர், உறுப்பினர் நியமனம் குறித்து ஜூன் 20ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
The post மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தலைவர், உறுப்பினர் பதவிகளை 3 மாதங்களில் நிரப்ப வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
