தென் மாவட்டங்களில் எடப்பாடிக்கு டெபாசிட் கிடைக்காது: நடிகர் கருணாஸ் உறுதி

ஆற்காடு: வரும் சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் எடப்பாடிக்கு டெபாசிட் கிடைக்காது என்று நடிகர் கருணாஸ் கூறினார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட மருது பாண்டியர்களின் 223வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று ஆற்காட்டில் நடந்தது. அதனை முன்னிட்டு அவர்களது திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு ஊர்வலம் நடந்தது. அதனை முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் நடிகர் கருணாஸ் துவக்கி வைத்து மருது பாண்டியர்கள் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும்வரை முக்குலத்தோர் புலிப்படையினர் ஒருபோதும் அவர் தலைமையை ஏற்கப்போவதில்லை. வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் எடப்பாடியை சார்ந்த ஒருவர் கூட வெற்றி பெறப்போவதில்லை. அவர்கள் முற்றிலுமாக டெபாசிட் இழப்பார்கள். அதற்கு முக்குலத்தோர் சமுதாயத்தினர் மத்தியில் விழிப்புணர்வு செய்து முக்குலத்தோர் புலிப்படையினர் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை வரவேற்கிறோம். வெறும் மாநாடாக மட்டுமே மக்களிடத்தில் கொண்டு சேர்ந்து விடுமா என்பதை யோசிக்க வேண்டும். விஜய்க்கு அரசியல் புதிது. சினிமா அவருக்கு பழையது. புதியதாக அரசியலில் அடியெடுத்து வைப்பதை வரவேற்கிறோம். அரசியல் நிறைய பாடத்தை கற்றுக் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தென் மாவட்டங்களில் எடப்பாடிக்கு டெபாசிட் கிடைக்காது: நடிகர் கருணாஸ் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: