கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாதவர் தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவிப்பு

மல்லசமுத்திரம், அக்.25: வையப்பமலை அடுத்த மணலி ஜேடர்பாளையத்தில் பெண் கொலை வழக்கில், கோர்ட்டில் ஆஜராகாத நபரை, தேடப்படும் குற்றவாளியாக எலச்சிபாளையம் போலீசார் அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அடுத்த வையப்பமலை அருகே, மணலி ஜேடர்பாளையத்தை சேர்ந்த அண்ணா நகர் ராஜேந்திரன்(48). இவரது மனைவி நாகலட்சுமி என்பவர், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டு, ஜேடர்பாளையத்தில் உள்ள மயானத்தில் கிடந்தார். இதுகுறித்து, எலச்சிபாளையம் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இந்த வழக்கு திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய மணலிஜேடர்பாளையம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கந்தசாமி(60) என்பவர், இதுவரை கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார். இதனையடுத்து, அவரை எலச்சிபாளையம் போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.

The post கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாதவர் தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: