வழக்கு விசாரணைக்கு துப்பாக்கியுடன் நீதிமன்றம் வந்த ரவுடி

தண்டையார்பேட்டை: எண்ணூர் காசி கோயில் குப்பம் 2வது தெருவை சேர்ந்தவர் ராகவன் (எ) வீரராகவன் (26). இவர் மீது காசிமேடு காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட இவர், சமீபத்தில் ஜாமீனில் வெளியில் வந்தார். ஆனால், அதன் பின்னர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் செல்லாமல் தலைமறைவானார். இதையடுத்து, அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து, வீரராகவன் கடந்த வாரம் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் தினேஷ் என்பவருடன் ஆஜராகி, நீதிபதியிடம் விளக்க கடிதம் அளித்தார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, வீரராகவனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அப்போது, ரவுடி வீரராகவன் தனது பாதுகாப்பிற்காக கைத்துக்கி வைத்திருப்பதாகவும், இந்த துப்பாக்கி தனது நண்பர் அப்பு (எ) புதூர் அப்புவுக்கு சொந்தமானது என்று கூறி, துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களை வழக்கறிஞரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, காசிமேடு காவல் நிலையத்தில் இந்த துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் ஒப்படைக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட போலீசார், இந்த துப்பாக்கி உரிமம் பெற்றதா அல்லது சட்டவிரோதமாக வைத்திருந்ததா என விசாரணை நடத்தினர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய அப்புவின் துப்பாக்கி அது என்பது தெரியவந்தது. போலீசார் விசாரணை மேலும் தீவிரமாகியுள்ளது.

The post வழக்கு விசாரணைக்கு துப்பாக்கியுடன் நீதிமன்றம் வந்த ரவுடி appeared first on Dinakaran.

Related Stories: