கோபத்தில் வீட்டை விட்டு சென்ற தாயை அழைத்து வருவதில் தகராறு; கோடாரியால் சரமாரியாக மகன் வெட்டிக்கொலை: கொடூர தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மோச்சேரிக்கு செல்லும் வழியில் உள்ள குளக்கரை பகுதியில் வசித்து வருபவர் கோபால் (65). கூலி தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. முதல் கணவர் இறந்து விட்டதால் கோபாலை 2வதாக சரஸ்வதி திருமணம் செய்தார். சரஸ்வதியின் முதல் கணவருக்கு பிறந்த மகன் பார்த்தீபன் (35). சோத்துபாக்கத்தில் உள்ள ஒரு லாரி ஷெட்டில் பஞ்சர் போடும் வேலை செய்து வந்தார். கோபால்-சரஸ்வதியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கோபாலுக்கும், பார்த்தீபனுக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி மது அருந்தி விட்டு சண்டை போடுவார்கள். அவர்களை சரஸ்வதி சமாதானப்படுத்துவார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கோபாலுக்கும், சரஸ்வதிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சரஸ்வதி சென்று விட்டார். அவரை வீட்டுக்கு அழைத்து வருவதில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல மது அருந்தி விட்டு கோபால், வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் பார்த்தீபனும் வந்தார். அப்போது சரஸ்வதியை அழைத்து வருவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோபால், பார்த்தீபனை அடித்து உதைத்தார். இதனால் கோபத்தில் சாப்பிடாமல் படுக்கைக்கு சென்று விட்டார் பார்த்தீபன். சிறிது நேரத்தில் கோபாலும் தனி அறையில் தூங்கினார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் படுக்கையில் இருந்து எழுந்த கோபாலுக்கு, மகன் மீதான ஆத்திரம் தீரவில்லை. வீட்டின் பின்புறம் வைத்திருந்த கோடாரியை எடுத்து வந்து, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பார்த்தீபனை சரமாரியாக தாக்கினார்.

கழுத்து, தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து கோபால், தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் இன்று காலையில் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவர மதுராந்தகம் போலீசில் புகார் செய்தனர். போலீசார், விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து கோபாலை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கோபத்தில் வீட்டை விட்டு சென்ற தாயை அழைத்து வருவதில் தகராறு; கோடாரியால் சரமாரியாக மகன் வெட்டிக்கொலை: கொடூர தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு appeared first on Dinakaran.

Related Stories: