மதுராந்தகம் அருகே நேற்று அதிகாலை பயங்கரம் கோடாரியால் வெட்டி மகனை கொன்ற தந்தை: வீட்டை விட்டு சென்ற தாயை அழைத்து வராததால் வெறிச்செயல்

மதுராந்தகம்: கோபத்தில் வீட்டை விட்டு சென்ற தாயை அழைத்து வருவதில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தந்தை கோடாரியால் மகனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான வாலிபரின் தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் அடுத்த மோச்சேரிக்கு செல்லும் வழியில் குளக்கரை பகுதி உள்ளது.

இங்கு வசித்து வருபவர் கோபால் (65). கூலி தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவரது, முதல் கணவர் இறந்து விட்டதால் கோபாலை 2வதாக சரஸ்வதி திருமணம் செய்து கொண்டார். சரஸ்வதியின் முதல் கணவருக்கு பிறந்த மகன் பார்த்தீபன் (35). சோத்துபாக்கத்தில் உள்ள ஒரு லாரி ஷெட்டில் பஞ்சர் போடும் கடையில் வேலை செய்து வந்தார். கோபால்-சரஸ்வதியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கோபாலுக்கும், பார்த்தீபனுக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்தது.

இருவரும் அடிக்கடி மது அருந்தி விட்டு சண்டையிட்டு கொள்வது வழக்கமான இருந்து வந்துள்ளது. அவர்களை சரஸ்வதி சமாதானப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கோபாலுக்கும், சரஸ்வதிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், கோபத்தில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சரஸ்வதி சென்று விட்டார். அவரை வீட்டுக்கு அழைத்து வருவதில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல மது அருந்தி விட்டு கோபால், வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் பார்த்தீபனும் வந்துள்ளார். அப்போது, சரஸ்வதியை அழைத்து வருவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த கோபால், பார்த்தீபனை அடித்து உதைத்துள்ளார். இதனால், பார்த்திபன் கோபத்தில் சாப்பிடாமல் படுக்கைக்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் கோபாலும் தனி அறைக்கு சென்று தூங்கினார். இருப்பினும் தூக்கம் வராமல் இரவு முழுவதும் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் படுக்கையில் இருந்து எழுந்த கோபாலுக்கு, மகன் மீதான ஆத்திரம் தீரவில்லை. வீட்டின் பின்புறம் வைத்திருந்த கோடாரியை எடுத்து வந்து, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பார்த்தீபனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், கழுத்து, தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து கோபால், அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து நேற்று காலையில் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வரவே அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மதுராந்தகம் போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கோபாலை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post மதுராந்தகம் அருகே நேற்று அதிகாலை பயங்கரம் கோடாரியால் வெட்டி மகனை கொன்ற தந்தை: வீட்டை விட்டு சென்ற தாயை அழைத்து வராததால் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Related Stories: