ரூ.18 கோடி செலவில் உருவாகிறது பெங்களூரு ஏர்போர்ட் வர்த்தக பூங்கா: 3.5 லட்சம் வேலைவாய்ப்பு இலக்கு

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 20 லட்சம் சதுர அடியில் பிரமாண்ட வர்த்தக பூங்கா அமைய இருக்கிறது. ரூ.18 கோடியில் உருவாகும் இந்த ஏர்போர்ட் பூங்காவால் 3.5 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பெங்களூரு சர்வதேச விமான நிலையம் தேவனஹள்ளியில் இயங்கி வருகிறது. இங்கு உலக மையத்தின் சார்பில் வர்த்தக பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக பெங்களூரு ஏர்போர்ட் சிட்டி லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரு சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கர்நாடக மாநில அரசின் புதிய குளோபல் கேப்பலிட்டி மைய கொள்கைப்படி (24-29) 3.5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி மாநில பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்வதேச விமான நிலைய வளாகத்தில் ஏர்போர்ட் சிட்டி என்ற பெயரில் வர்த்தக பூங்கா 20 லட்சம் சதுர அடியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விமானங்கள் புறப்படும் மையமாகவும் வர்த்தக பூங்கா, கல்வி, சுகாதாரம், பல்வேறு தொழில் மையம், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட நகரமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து பெங்களூரு ஏர்போர்ட் சிட்டி லிமிெடட் செயல் இயக்குனர் ராவ் முனுகுட்லா கூறியதாவது, ‘பெங்களூருவில் உருவாகும் ஏர்போர்ட் சிட்டி இந்தியாவின் பிரிமியர் மையமாக அனைவரும் கவரும் வகையில் அமைக்கப்படும்.

தற்போது ஏர்போர்ட் மேற்கு மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து வர்த்தக பூங்கா நடந்து செல்லும் தொலைவில் அமையும். மேலும் இந்த மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் வர்த்தக பூங்காவில் இருந்து இணைப்பு வழி வசதி செய்து தரப்படும். இதனால் பயணிகள், பணியாளர்கள், பார்வையாளர்கள் மிக சவுகரியமாக உணர்வார்கள்’ என்றார்.

The post ரூ.18 கோடி செலவில் உருவாகிறது பெங்களூரு ஏர்போர்ட் வர்த்தக பூங்கா: 3.5 லட்சம் வேலைவாய்ப்பு இலக்கு appeared first on Dinakaran.

Related Stories: