ராணுவத்தினருக்கான சலுகைகள் அக்னி வீரர்களுக்கு கிடைக்காதது ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பீரங்கி பயிற்சி மையத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பீரங்கி குண்டு வெடித்ததில் கோஹில் விஷ்வராஜ் சிங், சைபத் ஷீத் ஆகிய 2 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பீரங்கி பயிற்சியில் குண்டு வெடித்து இறந்த 2 வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

இந்த சம்பவம் அக்னி வீரர் திட்டம் பற்றிய கேள்விகளை மீண்டும் எழுப்புகிறது. ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், இதர சலுகைகள் ஆகியவை அக்னி வீரர்களுக்கு குறித்த நேரத்தில் கிடைக்குமா? அக்னி வீரர்கள் திட்டத்தில் சேர்ந்த வீரர்களுக்கு பென்சன் மற்றும் சலுகைகள் கிடைப்பது இல்லை ஏன்? இரண்டு வீரர்களுக்கும் பொறுப்புகள், தியாகம் ஆகியவை ஒன்று தான்.

ஆனால் வீர மரணத்துக்கு பின் ஏன் இந்த பாகுபாடு? ஒரு ராணுவ வீரரின் உயிர் இன்னொரு ராணுவ வீரரின் உயிரை விட ஏன் மதிப்புமிக்கது என்று பிரதமர் மோடியும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் பதில் சொல்ல வேண்டும். இதற்கு எதிராக போராடுவேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post ராணுவத்தினருக்கான சலுகைகள் அக்னி வீரர்களுக்கு கிடைக்காதது ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: