ஆயுத பூஜையை முன்னிட்டு சமவெளி பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு கரும்பு வரத்து அதிகரிப்பு

ஊட்டி : ஆயுத பூஜையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு சமவெளி பகுதிகளில் இருந்து கரும்பு வரத்து அதிகரித்துள்ளது. ஊட்டியில் ஒரு கரும்பு ரூ.50 முதல் 70க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் ஆயுதபூஜை, பொங்கல் பண்டிகைக்காக சமவெளி பகுதிகளில் இருந்தே கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட அனைத்து பூஜை பொருட்களும் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன.

பொதுவாக பண்டிகை நாட்களுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் இந்த பொருட்கள் எடுத்து வந்து விற்பனை செய்யப்படும். சமவெளிப் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுவதால், சற்று கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். நாளை 11ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில், நேற்றே ஊட்டி மார்க்கெட்டிற்கு கரும்பு, பூஜைக்கான மலர்கள், மஞ்சள், வாழை போன்றவை வரத்துவங்கின.

நேற்று முதலே கரும்பு விற்பனை துவங்கியது. ஊட்டியில் ஒரு கரும்பு ரூ.50 முதல் 70 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.50க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில், இம்முைற ரூ.20 கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இம்முறை மாவட்டத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருவதால், மலர்களும் குறைந்தளவே வந்துள்ளதால், மாலை மற்றும் மலர்களின் விலை சற்று கூடுதலாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பூஜை பொருட்கள் வாங்க ஊட்டி, குன்னூர் போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஆயுத பூஜையை முன்னிட்டு சமவெளி பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு கரும்பு வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: