நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்

சேலம்: நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல் கூறினார். எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆவணி பேரூா் கீழ்முகம் ஊராட்சி, போடிநாயக்கன்பட்டி அருகே உள்ள குப்பதாசன் வளவு பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் – ஆனந்தி தம்பதிக்கு அகிலா (20), புனிதா (19) என இரு மகள்கள் உள்ளனா். கூலித் தொழிலாளியான செந்தில்குமாா் 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், ஆனந்தி கொங்கணாபுரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

அகிலா திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். புனிதா 2022-2023 கல்வியாண்டில் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார். பின்னர் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். அண்மையில் நடந்து முடிந்த மருத்துவ கலந்தாய்வில் மாணவி புனிதாவிற்கு மதிப்பெண் குறைந்ததால் மருத்துவர் இடம் கிடைக்கவில்லை. இதனை அடுத்து மாணவி புனிதாவிற்கு நேற்று முன்தினம் நடைபெற்ற பாரா மெடிக்கல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்றார்.

இதிலும் மாணவி புனிதாவிற்கு அரசு ஒதுக்கிட்டிற்கான இடம் கிடைக்காத நிலையில் மனம் உடைந்த மாணவி புனிதா நேற்று யாரும் இல்லாத நிலையில் தனது வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல் கூறினார். உயிரிழந்த மாணவி புனிதா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தார்.

The post நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல் appeared first on Dinakaran.

Related Stories: