மெரினாவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஒன்றிய துணைச் செயலாளர் னிவாசன், மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளர் வதனா ஸ்ரீனிவாசன், பாஜ இளைஞர் அணி நிர்வாகி ரூக்மங்நாதன், பார்த்திபன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மத்திய சென்னை மேற்கு மாவட்ட துணைத்தலைவி தனலட்சுமி ஏற்பாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் லட்சுமி பிரபா, மீனா குமாரி, பொன்னி குமாரி, உமாபதி, மோகன், உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தனர். அவர்களை செல்வப்பெருந்தகை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: சென்னையில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளின்போது 5 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். இது மிகவும் துயரமான சம்பவம். காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள். இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஒரு பொது நிகழ்ச்சியில் துயரங்கள் ஏற்படாமல் தமிழ்நாடு அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்திய விமானப்படை கடந்த காலங்களில் மாலை நேரங்களில் இந்த விமான சாகச நிகழ்ச்சிகளை நடத்தியது. சென்னையில் மட்டும் நண்பகலில் உச்சி வெயிலில் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறது. இந்த மரணங்களை அரசியலாக்க விரும்பவில்லை. நீர்சத்து குறைபாடு காரணமாக 5 பேர் இறந்துள்ளனர். காங்கிரஸ் சார்பில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். குழந்தைகளின் படிப்பு செலவை காங்கிரஸ் அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post மெரினாவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: