சிறையில் உள்ள மகனுக்கு கஞ்சா கடத்தல்: தந்தையிடம் விசாரணை

புழல்: புழல் சிறையில் கைதியாக உள்ள மகனை பார்ப்பதற்காக வந்தபோது, கஞ்சா கடத்தி வந்த தந்தையிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புழல் மத்திய விசாரணை சிறையில் சுமார் 3,500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில், சென்னை தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை தெருவைச் சேர்ந்த சத்யா (25) தண்டனை அனுபவித்து வருகிறார். இவர், மீனம்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அடிதடி வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரை, பார்ப்பதற்காக நேற்று அவரது தந்தை கணேசன் (48), தாய் சரிதா (43), மனைவி அமல் (23) ஆகிய 3 பேரும் உடைகள் மற்றும் பொருட்களை வாங்கிக்கொண்டு, சிறை கைதிகளை பார்க்கும் பார்வையாளர் அறை பகுதிக்குச் சென்றனர். அப்போது, சந்தேகமடைந்த சிறை காவலர்கள் சோதனை செய்தபோது, கணேசன் சட்டை பாக்கெட்டில் 2 கிராம் கஞ்சாவும், டவுசர் பாக்கெட்டில் 10 கிராம் கஞ்சாவும் வைத்திருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த சிறை காவலர்கள், இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், கணேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறையில் உள்ள மகனுக்கு கஞ்சா கடத்தல்: தந்தையிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: