பீகாரில் பலத்த மழை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: ரயில்கள் ரத்து

பாட்னா: பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் மாநிலத்தில் உள்ள கங்கை உள்ளிட்ட ஆறுகளில் வௌ்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கங்கையாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பாட்னா நகரின் பல பகுதிகள் மூழ்கியுள்ளன. ரயில்வே பாதைகளிலும் வெள்ளம் புகுந்துள்ளன. இதுகுறித்து கிழக்கு மத்திய ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சுல்தான்கஞ்ச் மற்றும் ரத்தன்பூர் ரயில்வே நிலையங்களுக்கு இடையே கங்கையாற்றின் குறுக்கே பாலம் உள்ளது.

அந்த பாலத்தை தொட்டபடி வெள்ளம் செல்கிறது. மேலும் ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி செல்கிறது. இதனால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுல்தான்கஞ்ச் மற்றும் ரத்தன்பூர் ரயில்வே நிலையங்களுக்கு இடையே ஆற்றில் வெள்ளம் அதிகரிப்பால் பாட்னா-தும்கா,பாகல்பூர்-தானாப்பூர் எக்ஸ்பிரஸ் உள்பட 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆஜ்மீர்-பாகல்பூர்,அவுரா-கயா,சூரத்-பாகல்பூர், ஆனந்த் விகார்-மால்டா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, முசாபர்நகர் ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜின் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில்வே பணியாளர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். ஒரு மணி நேரத்தில் தடம்புரண்ட இன்ஜின் மீட்கப்பட்டு மீண்டும் வழக்கமான செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விபத்து காரணமாக ரயில் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை.

The post பீகாரில் பலத்த மழை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: