இறைவன் வகுத்த இலவசப் பாதை

ஒரு முதியவர் தனது பேரனிடம்; ‘‘பேரனே, சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம். ஆனால், நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்’’ என்றார். நூதனமான ஒன்றை தாத்தா கூற விழைகிறார் என்ற எதிர்பார்ப்புடன் பேரன், அதை எதன் அடிப்படையில் தாத்தா கூறுகிறீர்கள் என்றான்.முதியவர், நான் சரியாகத்தான் கூறுகிறேன். சூதாட்டத்திற்கு பணம் வேண்டும், மது அருந்த பணம் வேண்டும், சிகரெட் புகைக்க பணம் வேண்டும், கூடாத இசை கேட்க பணம் வேண்டும், பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும் அல்லவா? ஆனால் மகனே, அன்பு காட்ட பணம் தேவையில்லை. கடவுளை வணங்க பணம் தேவையில்லை. சேவை செய்ய பணம் தேவையில்லை. விரதம் இருக்க பணம் தேவையில்லை. மன்னிப்பு கோர பணம் தேவையில்லை. பார்வையைத் தாழ்த்த பணம் தேவையில்லை.

நம் உரிமையை நிலைநாட்ட பணம் தேவையில்லை. இத்தனைக்கும் மேலாக, இறைவன் நாமம் சொல்ல வேறெதுவும் தேவையில்லை.மகனே, மகனே! இப்பொழுது சொல்… நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா? இலவசமான சொர்க்கத்தை நேசிக்கிறாயா? என்றார். இறைமக்களே, இந்த முதியவரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது? பல ஆழமான அர்த்தங்களையும், வாழ்வின் யதார்த்தங்களையும் எத்தனை எளிதாக விளக்கிவிட்டார் பாருங்கள்.‘‘பாவிகளுடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே. அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே’’ (நீதி.4:14,15) என்றும், ‘‘நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக் கொள்வாயாக’’ (நீதி.2:20) என்றும் இறைவேதம் கூறுகிறது. ஆகவே நாம் இறைவன் காட்டும் பாதையில் நடந்து சொர்க்கம் சேருவோம்.

– அருள்முனைவர்
பெ.பெவிஸ்டன்.

The post இறைவன் வகுத்த இலவசப் பாதை appeared first on Dinakaran.

Related Stories: