மாநகர பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் அபேஸ் ஆந்திர வாலிபர், பெண் கைது

தண்டையார்பேட்டை: சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (64). இவர், ராயபுரம் சிங்கார தோட்டம் பகுதியில் வசிக்கும் தனது மகள் சரண்யாவுக்கு தர வேண்டிய ரூ.1 லட்சத்தை எடுத்துக் கொண்டு, கடந்த மாதம் 22ம் தேதி, நுங்கம்பாக்கத்தில் இருந்து மின்சார ரயிலில் சென்னை கடற்கரை ரயில் நிலையம் வந்தார். அங்கிருந்து மாநகர பேருந்தில் (தடம் எண்.4) ராயபுரம் பகுதிக்கு வந்தார். பேருந்தில் இருந்து இறங்கியபோது, அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து ராயபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பாலு (38), இவரது தம்பி மனைவி அகல்யா (20) ஆகிய இருவர், பணத்தை அபேஸ் செய்தது தெரிந்தது. தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் இவர்கள், ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வந்து, பேருந்து மற்றும் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் திருடி சென்றது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

The post மாநகர பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் அபேஸ் ஆந்திர வாலிபர், பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: