தர்மபுரி, ஆக.1: தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியில் நேற்று முன்தினம், திடீரென மின்நிறுத்தம் ஏற்பட்டது. நீண்ட நேரமாகியும் மின்சார விநியோகம் இல்லாததால், அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், அந்த பகுதியில் மின்நிறுத்தம் எதுவும் செய்யப்படவில்லை என தெரிவித்தனர். டிரான்ஸ்பார்மரில் பழுது எதுவும் ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகித்தனர். இதையடுத்து, மாரண்டஅள்ளி மின் உதவி செயற்பொறியாளர் சத்யா மற்றும் ஊழியர்கள், பஞ்சப்பள்ளி பகுதிக்கு நேரில் வந்து சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்று உடைக்கப்பட்டு, அதில் இருந்து ₹1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயில், காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதும், அதனால் அந்த பகுதியில் மின்சாரம் தடை ஏற்பட்டதும் தெரியவந்தது. இதுபற்றி மின்வாரிய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post டிரான்ஸ்பார்மரை உடைத்து ஆயில், காப்பர் கம்பி திருட்டு appeared first on Dinakaran.