சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

சேந்தமங்கலம், ஜூலை 29: கொல்லிமலையில் குளுகுளு சீசனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சனி, ஞாயிறு வாரவிடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, சினி பால்ஸ், சந்தன பாறை அருவிகளில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர். கொல்லிமலையின் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. மலைப்பாதையில் அதிக அளவில் பனிமூட்டம் இருக்கிறது. குளுகுளு சீசன் தொடங்கியுள்ளதால், பகல் நேரத்தில் குளிர் காற்று வீச தொடங்கியுள்ளது.

கொண்டை ஊசி வளைவுகளில் பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். காலை வேளையில் பசுமையான மலைகளில் வெண் போர்வை போர்த்தியது போல் மேக கூட்டங்கள் மலைகளைக் மெதுவாக கடந்து செல்லும் காட்சி, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றது. குடும்பத்தினருடன் அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயில்களில் சாமிதரிசனம் செய்துவிட்டு தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சி முனையம், படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கண்டு ரசித்தனர்.

வீடு திரும்பும் பொழுது சோளக்காடு, தெம்பளம், திண்டு பகுதிகளில் உள்ள பழச்சந்தையில் மிளகு, தேன், அன்னாசி, கொய்யா, மலை வாழைப்பழம், பலா போன்றவற்றை வாங்கி சென்றனர்.

The post சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: