ஒவ்வொரு மாநிலத்திற்கும் பாஜ புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

புதுடெல்லி: பல்வேறு மாநிலங்களுக்கு பாஜ புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. மக்களவை தேர்தல் முடிந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் பாஜ ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பாஜவின் புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களை நியமித்து கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் தேசிய பொது செயலாளர்கள் விநோத் தாவ்டே, தருண் சுக் மற்றும் ராதா மோகன் தாஸ் அகர்வால் ஆகியோர் முறையே பீகார், ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடகாவில் கட்சியின் அமைப்பு விவகாரங்களை தொடர்ந்து வழிநடத்துவார்கள்.

அதே நேரத்தில் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் சதீஷ் பூனியா ஆகியோர் கேரளா மற்றும் அரியானாவின் பொறுப்பாளர்களாக இருப்பார்கள். பீகார் எம்எல்ஏ நிதின் நபின் சட்டீஸ்கர் மாநில பாஜ பொறுப்பாளராகவும், கோவாவிற்கு ஆஷிஷ் சூத், இமாச்சலப்பிரதேசம்- ஸ்ரீகாந்த் சர்மா, ஜார்க்கண்ட் – லஷ்மிகாந்த் பாஜ்பாய், மத்தியப்பிரதேசம் – மகேந்திர சிங், ஒடிசா-விஜய்பால் சிங் தோமர் ஆகியோர் பொறுப்பேற்க உள்ளனர். குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பஞ்சாபிற்கும், தேசிய பொது செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் உத்தரகாண்டின் பாஜ பொறுப்பாளராகவும் நீடிப்பார்கள். வடகிழக்கு மாநிலங்களின் ஒருங்கிணைப்பாளராக பாஜ எம்பி சம்பித் பத்ரா நீடிப்பார். மேலும் பெரும்பாலான மாநிலங்களுக்கு இணை பொறுப்பாளரையும் பாஜ நியமித்துள்ளது.

The post ஒவ்வொரு மாநிலத்திற்கும் பாஜ புதிய பொறுப்பாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: