கிணற்றில் குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை செல்போன் கேம் விளையாடியதை கண்டித்ததால்

வந்தவாசி, ஜூலை 2: வந்தவாசி அருகே இரவில் செல்போன் பார்த்து கொண்டிருப்பதை தந்தை கண்டித்ததால், கல்லூரி மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். வந்தவாசி அடுத்த கீழ்வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் அருள்தாஸ்(21). தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 29ம் தேதி இரவு அருள்தாஸ் நீண்ட நேரமாக செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாராம். இதை பார்த்த தந்தை சங்கர், தூங்காமல் விளையாடிக் கொண்டிருக்கிறாயே என கண்டித்து செல்போன் பறித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அருள்தாஸ், நேற்று முன்தினம் முடி திருத்தம் செய்து கொண்டு வருவதாக தாய் மேரியிடம் கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், நேற்று வீட்டின் அருகே பெருமாள் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் அருள்தாஸ் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த வடவணக்கம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் செல்போன் பார்ப்பதை கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து சங்கர் அளித்த புகாரின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post கிணற்றில் குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை செல்போன் கேம் விளையாடியதை கண்டித்ததால் appeared first on Dinakaran.

Related Stories: