வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் தண்டராம்பட்டு அருகே

தண்டராம்பட்டு, ஜூன் 29: தண்டராம்பட்டு அருகே வனவிலங்கு வேட்டையாட முயன்ற 2 பேரை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், ஒரு நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை வனச்சரக அலுவலர் சீனிவாசன், வனவர் முருகன், வனக்காப்பாளர்கள் ஏழுமலை, பலராமன், வெங்கடேசன் ஆகியோர் தென்பெண்ணையாறு காப்புக்காடு சொர்ப்பனந்தல் மேற்குபீட் வனப்பகுதியில் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள மரத்துக்கு அடியில் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அப்பகுதியில் தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மறைந்து கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், ஆண்டிப்பட்டி மணிகண்டன்(35), பெரியதண்டா விஜய்(23) என்பதும், அனுமதியில்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்து கொண்டு வனப்பகுதியில் அடிக்கடி வனவிலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர், அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து மணிகண்டன், விஜய் ஆகிய இருவரையும் கைது செய்து தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கம் சிறையில் அடைத்தனர்.

The post வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் தண்டராம்பட்டு அருகே appeared first on Dinakaran.

Related Stories: