2வது திருமணம் செய்து கொள்வதாக மிரட்டும் கணவர் மீது நடவடிக்கை சினிமா இயக்குனர் மீது மனைவி புகார் திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, ஜூன் 28: திருவண்ணாமலையில் 2வது திருமணம் செய்து கொள்வதாக மிரட்டும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சினிமா இயக்குனர் மீது மனைவி புகார் அளித்துள்ளார். திருவண்ணாமலை வேங்கிக்கால் எழில் நகரை சேர்ந்தவர் லட்சுமிகாந்தன் மனைவி பூர்ணிமா(41). இவருக்கு ஏற்கனவே கோவையை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி சட்டப்படி விவாகரத்து பெற்றார். அதைத்தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு குடியாத்தம் செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த லட்சுமிகாந்தன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில், லட்சுமிகாந்தன் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சிப்பதாக தகவல் அறிந்து பூர்ணிமா அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு லட்சுமிகாந்தன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பூர்ணிமா நேற்று அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: என்னுடைய கணவர் லட்சுமிகாந்தன் சினிமா துறையில் பணிபுரிந்து வருகிறார். பானா காத்தாடி உள்ளிட்ட படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு அவரை மறுமணம் செய்து கொண்டு சென்னையில் ஐந்தாண்டுகள் வசித்து வந்தோம். திருவண்ணாமலையில் சொந்தமாக வீடு வாங்கி செட்டில் ஆகலாம் என அவர் தெரிவித்ததால் தற்போது என்னுடைய தாய் வீட்டில் தங்கி இருக்கிறேன். இந்நிலையில், எனது கணவர் லட்சுமிகாந்தன், சுவேதா என்ற பெண்ணுடன் தனியாக வசித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிகிறது. இதுகுறித்து கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுகிறார். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், லட்சுமிகாந்தனிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 2வது திருமணம் செய்து கொள்வதாக மிரட்டும் கணவர் மீது நடவடிக்கை சினிமா இயக்குனர் மீது மனைவி புகார் திருவண்ணாமலையில் appeared first on Dinakaran.

Related Stories: