18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: வாரவிடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இன்று பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

வாரவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரிப்பது வழக்கம். அப்போது பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதேபோல் நேற்று வாரவிடுமுறை என்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்திருந்தது. நேற்று ஒரேநாளில் 80,404 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 35,825 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.83 கோடி காணிக்கை செலுத்தினர்.

இன்றும் வாரவிடுமுறை என்பதால் அதிகாலை முதல் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் காத்திருக்கின்றனர். நேர ஒதுக்கீடு டிக்கெட் இன்றி வந்த பக்தர்கள் சுமார் 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post 18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: