இதுகுறித்து தகவல் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி சாய் பிரனீத் கவனத்திற்கு வந்தது. எஸ்பி உத்தரவுப்படி டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் மாமல்லபுரம் விரைந்தனர். அப்போது பிறந்த நாள் விழா முடிந்து கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் செங்கல்பட்டு மார்க்கமாக சென்னையை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார். உடனே இதுகுறித்து தகவல் அறிந்த தனிப்படை போலீசார் வடநெம்மேலியில் உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஆனால் அதற்குள் சீர்காழி சத்யாவின் கார் அங்கிருந்து சென்றுவிட்டது.
உடனே தனிப்படை போலீசார் மின்னல் வேகத்தில் பின் தொடர்ந்து செங்கல்பட்டு பழவேலி பகுதியில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, சீர்காழி சத்யாவிடம் கள்ளத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், 3 அரிவாள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சீர்காழி சத்யாவை பிடிக்க முயன்றனர். உடனே சீர்காழி சத்யா தன்னுடன் வந்த 3 பேருடன் மலைப்பகுதிக்குள் தப்பி ஓடினார். ஆனால், இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் விடாமல் பின் தொடர்ந்து சீர்காழி சத்யாவை பிடித்தார். அப்போது சீர்காழி சத்யா கையில் வைத்திருந்த அரிவாளால் தனிப்படை இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமாரை வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
அப்போது டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தற்பாதுகாப்புக்காக துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்டனர். இதில் கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யாவின் இடது காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார். உடனே போலீசார் சீர்காழி சத்யாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காயமடைந்த இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமாருக்கு (31) கையில் 7 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு சீர்காழி சத்யாவை டாக்டர்கள் பரிந்துரைப்படி மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் வந்த 3 ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா உள்ளிட்ட 4 பேரை திருக்கழுக்குன்றம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கதிரவன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதற்கிடையே மாமல்லபுரம் ரிசார்ட்டில் நடந்த பிறந்த நாள் விழாவில், போலீசாரால் தேடப்படும் ரவுடிகள் பலர் வந்து சென்றதாக கூறப்படுகிறது. பிறந்த நாள் விழாவில் பாஜ பிரமுகர்களும் கலந்து கொண்டனர். எனவே அவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்த கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட 3 நபர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் பாஜ மாநில செயலாளரும் வக்கீலுமான அலெக்ஸ், ரவுடி சீர்காழி சத்யா வழக்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
The post திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டவர் கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா சுட்டு பிடிப்பு: இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிவிட்டு மலைப்பகுதியில் தப்பி ஓடியபோது நடந்தது appeared first on Dinakaran.