திருவண்ணாமலைக்கு கடத்தி சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை; வழக்கில் இருவர் பிடிபட்டனர்: பேஸ்புக் காதலனுக்கு வலை


அண்ணாநகர்: சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான காதலனை தேடி வருகின்றனர். சென்னை அண்ணாநகரை சேர்ந்த பெற்றோர், தங்களது 17 வயது மகளை காணவில்லை, என்று அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து மாயமான சிறுமியின் செல்போன் எண்ணை டிராக் செய்தனர். அதில் சிறுமி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று, ஒரு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மீட்டு, அரும்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வினோத் (21) என்பவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

அவர், சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி திருவண்ணாமலைக்கு கடத்திச் சென்று, தனது நண்பர்களான அஜித் (21), ஜீவா (21) ஆகியோருடன் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, பேஸ்புக் காதலன் வினோத் மற்றும் நண்பர்களான அஜித், ஜீவா ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் பதுங்கி இருந்த அஜித், ஜீவா ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பேஸ்புக் காதலன் வினோத்தை தேடி வருகின்றனர்.

The post திருவண்ணாமலைக்கு கடத்தி சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை; வழக்கில் இருவர் பிடிபட்டனர்: பேஸ்புக் காதலனுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: