வருமானம் இல்லாத கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ரிஷிவந்தியம் எம்எல்ஏ க.கார்த்திகேயன் (திமுக) பேசுகையில், “ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம், ஆதிதிருவரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தங்கும் விடுதி கட்ட அரசு முன்வருமா? என்றார். இதற்கு பதில் அளித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், “பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.86.50 லட்சத்தில் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு வரும் 16ம் தேதி ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு பணி இறுதி செய்யப்படும்” என்றார்.

எம்எல்ஏ க.கார்த்திகேயன்: சின்னசேலம் வட்டம் கூகையூர் ஊராட்சியில் அமைந்துள்ள சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலை புனரமைத்து குடமுழுக்கு செய்ய வேண்டும். அமைச்சர் பி.கே.சேகர்பாபு: சொர்ணபுரீஸ்வரர் கோயிலுக்கு 2008ம் ஆண்டு இறுதியாக குடமுழுக்கு நடைபெற்றது.

தற்போது அந்த கோயிலுக்கும் மாநில குழு மற்றும் மண்டல குழு ஒப்புதல் பெறப்பட்டு மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் வருமானம் இல்லாத கோயில்களுக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தந்து, திருப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தந்துள்ளார். அதன்படி இந்த கோயிலின் திருப்பணி இந்தாண்டு எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

The post வருமானம் இல்லாத கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: