கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். கேரளாவில் பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் நேற்று காலை சுமார் 8.15 மணியளவில் பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. பாலக்காடு மாவட்டத்தில் திருத்தாலா, திருமிற்றக்கோடு, கக்காட்டிரி, குமாரநல்லூர், ஆலூர், சாலிசேரி உள்பட பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

திருச்சூர் மாவட்டத்தில் குன்னங்குளம், குருவாயூர் எருமப்பட்டி உள்பட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. வீடுகளில் ஜன்னல்கள் அதிர்ந்ததாகவும், பூமிக்கு அடியில் இருந்து முழக்கம் கேட்டதாகவும் இந்த பகுதியினர் கூறினர். இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3ஆக பதிவாகி இருந்தது. இது சாதாரணமானது தான் என்றும் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்றும் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.55 மணியளவில் திருச்சூர் மாவட்டத்திலுள்ள குன்னங்குளம், எருமப்பட்டி, வேலூர் உள்பட சில பகுதிகளிலும், பாலக்காடு மாவட்டத்தில் வடக்காஞ்சேரி, திருத்தாலா, திருமிற்றக்கோடு ஆகிய இடங்களிலும் இந்த நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். அந்த சமயத்தில் பூமி குலுங்குவது போல் தோன்றியது என்று இந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கூறினர்.

The post கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.

Related Stories: